Sunday, August 28, 2022

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கையின் சிறப்பம்சங்கள்..

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கையின் சிறப்பம்சங்கள்: 

  • கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டன.

  • இவற்றில் அதிகபட்சமாக 353 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம மாதிரிகளின் காலம் கி.மு (பொ.ஆ.மு.) 580 என ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி-எழுத்தறிவு

  • கீழடியில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

  • இவற்றில் கி.மு. 580 காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடும் அடங்கும். இதிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததை அறிய முடிகிறது.

வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு

  • கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், புனேவின் தக்காண கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பதிவு செய்தது.

  • பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின்படி உடைந்த எலும்பு துண்டுகள் வகைப்படுத்தப்பட்டதில் திமிலுள்ள பசு / காளை, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, வரையாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

கட்டடத் தொழில்நுட்பம்

  • தமிழகத்தில் சங்ககாலத்தைச் சார்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல் இங்கு கிடைத்துள்ள செங்கற்கள் 1:4:6 என்ற விகிதாச்சார அளவிலேயே காணப்படுகிறது.

  • அக்காலகட்டம் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது தெரிகிறது.

நெசவுத் தொழில்

  • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள நூல் நூற்கப் பயன்படும் 180க்கும் மேற்பட்ட தக்களிகள், துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் (வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற) எலும்பினாலான கூரிய முனைகள் கொண்ட 20 தூரிகைகள், கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட தறியில் தொங்கவிடும் குண்டு, செம்பினாலான ஊசி போன்ற தொல்பொருள்கள் கிடைத்தன. 

  • இப்பகுதியில் நிலவியிருந்த நெசவுத் தொழிலின் நூல் நூற்றல், பாவு அமைத்தல், தறியமைத்தல், நெசவு அதன்பின் சாயமிடல் நிலைகளை உறுதி செய்கின்றன. 

வணிகம்

  • அகேட், கார்னீலியன் ஆகியவை கீழடி அகழாய்வுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. 

  • இது போன்ற மணிகள் செய்வதற்கான மூலப்பொருள்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து மகாராஷ்டிரம், குஜராத் வழியாக கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

  • கீழடியில் சிவப்பு வண்ண பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை பானைகள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த தனித்தன்மை வாய்ந்த அரிட்டைன் வகையாகும்.

ஆபரணங்கள் மற்றும் மணிகள்

  • தங்கத்தினாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்களின் சிறிய துண்டுகள், மதிப்புமிக்க மணிகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட வளையல்கள், சீப்புகள் ஆகிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  • இத்தகைய மதிப்புறு அணிகலன்களும், ஏனைய அணிகலன்களும் சங்ககாலச் சமூகம் வளமையுடன் இருந்ததற்கான சான்றுகளாகும்.

  • மேலும், கண்ணாடி, படிகம், குவார்ட்ஸ் வண்ணம் தீட்டப்பட்ட மண்ணாலான மணிகள், அகேட், கார்னீலியன் மற்றும் சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட 4,429 க்கும் மேற்பட்ட மணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

இரும்பு பொருள்கள்

அகழாய்வில் இரும்பு ஆணிகள் மற்றும் கத்திகளின் பாகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுடுமண் உருவங்கள்

சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், 600க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 28 காதணிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள்

  • தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பகடைக்காய், வட்டச்சில்லுகள் மற்றும் ஆட்டக்காய்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. 

  • அகழாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை சுடுமண்ணால் ஆனவை.

  • தட்டையான வடிவில் உள்ள பானை ஓட்டின் விளிம்புகள் நன்கு தேய்க்கப்பட்டு வட்ட வடிவத்தைக் கொண்டிருக்கும் விளையாட்டுப் பொருள் 'சில்லு' என்றழைக்கப்படுகிறது. இவ்வகை சில்லுகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

  • வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...